மகனை அரசுப் பள்ளியில் சேர்த்த சப்-இன்ஸ்பெக்டர்...
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் , தனியார் பள்ளியில் படித்து வந்த தனது மகனை அந்த பள்ளியில் இருந்து மாற்றி அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசுப் பள்ளிகளிலேயே எல்லோரும் படிக்க வேண்டும் என்ற குரல் ஒலித்துவருகிறது. அதிலும், அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்பது சாமானியனின் விருப்பமாகவே உள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; கிராமத்தில் பிறந்த நான் அரசு பள்ளியில் படித்தேன். அரசு பணியில் இருப்பதால், காலமாற்றத்துக்கு ஏற்ப என் மகனை சாய்குருவை தனியார் பள்ளியில் சேர்த்திருந்தேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு அரசு ஊழியராக இருக்கும் நாமே நம் பிள்ளையை பள்ளியில் படிக்கவைக்கிறோமே என்கிற குற்ற உணர்ச்சி எனக்குள்ளே ஓடிட்டே இருந்தது.
வசதியானவர்கள் தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை பார்த்து, ஏழைகளும் தங்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கிறார்கள். பிறகு, கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.
இதை நானே பல இடங்களில் பார்த்து வருத்தப்பட்டிருக்கேன். சமூகப் பொறுப்புள்ள பணியில் இருக்கிற நாம், அனைவருக்கும் முன் பலருக்கும் உதாரனமாக இருக்க நினைத்தேன். அதன்படி, சாத்தூர் அருகிலுள்ள படந்தால் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் எனது மகனை மூன்றாம் வகுப்பில் சேர்த்திருக்கிறேன்.
நான் எடுத்த இந்த முடிவைப் பலரும் பாரட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். என்னைப் பார்த்து பலரும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பார்கள் என நம்புகிறேன், கல்வி என்கிற அடிப்படை உரிமை எல்லோருக்கும் தரமாகவும் இலவசமாகவும் கிடைக்கும்னு உறுதியாக நம்புகிறேன்" என்றார்.