"எல்லாத்தையும் எடுப்பியா? இதையும் எடு" - பத்திரிகையாளர்கள் மத்தியில் சட்டையை தூக்கி காட்டிய எஸ்ஐ
திருப்பூர் சியாமளாபுரத்தில் சப்இன்ஸ்பெக்டர் சட்டையை தூக்கி காண்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சியாமளாபுரத்தில் டாஸ்மார்க் மதுபானக்கடையை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைப்பதற்கு தடியடி நடத்தினர்.
காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சாலைமறியலில் ஈடுபட்ட ஈஸ்வரி என்ற பெண்ணை கன்னத்தில் பலமாக தாக்கினார். இதில் அவருக்கு செவித்தின் பாதிப்படைந்தது. மேலும் தடியடி சம்பவத்தின் போது அங்கிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டி விரட்டி அடித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயரதிகாரிகளின் உத்தரவின்றி தடியடி நடத்தியும் பெண்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட ஏடிஎஸ்பி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் பெண்கள் மீது தடியடி நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. அதன்படி கோவை மாவட்ட எஸ்பி ரம்யாபாரதி சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கோவை எஸ்பி ரம்யாபாரதி இன்று சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதுடன் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி பதிவுகளையும் வாங்கிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் என்று கூறி சென்றுவிட்டார்.
எஸ்பி சென்று சிறிது நேரத்தில் படம்பிடித்து கொண்டிருந்த செய்தியாளர்களிடம் கோவை தனிப்பிரிவு எஸ்ஐ ரத்தினசாமி தான் சட்டையை தூக்கி காண்பித்து அநாகரிமாக செயல்பட்டுள்ளார்.
பொதுமக்கள் முன் ஒருசில காவல்துறை அதிகாரிகள் அநாகரிமாக நடந்து கொள்ளும் விதத்திற்கு அப்பகுதியினர் கடும் எதிப்பு தெரிவித்துள்ளனர்.