மாணவர்கள் போராடக் கூடாது...! போராடினால் அரசு வேலை கிடைக்காது...! போலீஸ் கமிஷனரின் அடடே எச்சரிக்கை...!
காவிரிக்காக மாணவர்கள் போராட்டம் செய்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், அவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்றும் திருச்சி போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் திருச்சி சாலையில் நேற்று இரவு 8 மணியளவில் மாணவர்கள் திடீரென திரண்டனர்.
அப்போது அவர்கள் காவிரிக்காக மத்திய மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மாணவர்கள் போராட்டம் நடத்துவது குறித்து விரைந்து வந்த போலீசார், மாணவர்களை கைது செய்தனர். ஆனால், அதன் பிறகும் மாணவர்கள் வருகை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதனால் போராட்டக்காரர்களைக் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் என வந்த வண்ணம் இருந்தனர். இதனால் போலீசார் செய்வதறியாமல் தவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கைது செய்யப்பட்டவர்களை அரசு பேருந்தில் போலீசார் ஏற்றிச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்தை உடைத்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.
மாணவர்கள் தப்பியோடுவதை கண்ட போலீசார், அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். போலீசாரின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். காயமடைந்த மாணவரகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரிக்காக போராட்டம் நடத்த சில மாணவர்கள் திடீரென கூடியதால் பரபரப்பு நிலவியது. சில இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல் நடந்ததால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
மாணவர்கள் போராட்டம் செய்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது என்று கூறினார். மாணவர்கள் மீது தடியடி நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கமிஷனர் அமல்ராஜ் பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.