ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு...! தூத்துக்குடி எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்தள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
வரும் ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன.
இதனால், கோபமடைந்த பொதுமக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிபிஎம் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி எஸ்.பி.க்கு ஆணை பிறப்பித்துள்ளது.
ஆலை முன்பு போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தமிழக அரச தரப்பில் கூறப்பட்டதை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.