ஸ்டெர்லைட் வழக்கு; ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து...ஐகோர்ட் அதிரடி!
தூத்துக்குடி போராட்டத்தின் போது கைதான ஹரிராகவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹரிராகவன் மீது போராட்டத்தை தூண்டியதாக பல்வேறு காவல் நிலையங்களில் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர் அவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக ஹரிராகவன் மனைவி சத்தியபாமா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது ஜனநாயக ஆட்சி நடக்கும் மாநிலமா அல்லது போலீஸ் ஆட்சி நடக்கும் மாநிலமா என அதிரடியாய் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, அவருக்கு நீதிபதிகள் அறிவுரைகளை வழங்கினர். பிறகு வழக்கறிஞர் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது. ஒருவரின் சுதந்திர உரிமையை பறிக்கும் நோக்கில் காவல்துறையினர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. உங்களுடைய ஒரு கையெழுத்து தனிநபரின் சுதந்தரத்தைப் பறிக்கும் என்பதை நினைவில் கொண்டு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.