கடத்தல் சிலையை போலீசார் விற்ற விவகாரம் - சிபிசிஐடி விசாரிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு!!
அருப்புக்கோட்டையில் சிலை கடத்தல் விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரையில் ஆரோக்கியராஜ் என்பவரிடமிருந்து 6 பழங்கால சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரான காதர்பாஷா மற்றும் போலீஸ்காரரான சுப்புராஜ் ஆகியோர் கைப்பற்றியதாகவும், பின்னர், அதை விற்று இருவரும் பணத்தை பிரித்து எடுத்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் இதற்கான ஆதாரங்களை ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஆய்வாளர் காதர்பாஷா டிஎஸ்பியாகவும், சுப்புராஜ் சிறப்பு சார்பு-ஆய்வாளராகவும் உள்ளனர்.
எனவே இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவு எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் இன்று நேரில் ஆஜராகி தாக்கல் செய்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் நேரில் ஆஜராகினார். அவரிடம் சிலை கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிஎஸ்பி காதர்பாஷாவை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார் நீதிபதி.
அதற்கு டிஎஸ்பி காதர்பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு குறித்து பொன் மாணிக்கவேல் விசாரிக்காவிடில் வழக்கை மாற்றலாம் எனவும், அதுவரை தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.