அருப்புக்கோட்டை

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அருப்புக்கோட்டையில் குடிநீர் வரத்து இல்லாததால், மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இல்லாமல் மக்கள் திணறி வருகின்றனர். இப்படியே தொடர்ந்தால் கோடைக் காலத்தில் மிகவும் சிரமமாக இருக்கும் என்று நகராட்சி அதிகாரிகள் அறிவுரை கூறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக வைகை அணையிலிருந்து கிடைக்க பெற்ற குடிநீர் வராததாலும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற குடிநீரும் போதிய அளவு வராததாலும், அருப்புக்கோட்டை நகராட்சி பகுதி மக்களுக்கு வறட்சியினால், குடிநீர் விநியோகம் செய்ய முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வந்தது.

மக்களின் சிரமத்தை போக்கிட சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் தூத்துக்குடி வல்லநாடு பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“கடந்த சில மாதங்களாக தாமிரபரணியில் இருந்து மிகக் குறைந்த அளவில் தண்ணீர் வந்தது. இதனை வைத்து வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினையை போக்க முடியாது என்பதால், அதனை போக்குவதற்கான வழிமுறைகளை அறிந்து, பாபநாசம், மணிமுத்தாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வல்லநாடு பகுதிக்கு வந்து சேரவில்லை என்று நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடம் கூறி 250 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

அந்த கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் பாபநாசம், மணிமுத்தாறு அணையிலிருந்து 205 கன அடி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். திறந்து விடப்பட்ட தண்ணீர் வல்லநாடு பகுதிக்கு தற்போது வந்து சேர்ந்துள்ளது. இதனால் குடிநீர் ஆதாரம் சிறிதளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை வைத்து அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக உள்ள 67 கிராமங்களுக்கு தாமிரபரணி குடிநீர் சுழற்சி முறையில் வழங்க நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை நகருக்கும் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படும்.

மேலும், வரும் கோடை காலத்தை சமாளிக்க சேர்வலாறு அணையிலிருந்து தாமிரபரணியில் 100 கனஅடி நீர் திறக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அணை திறக்கும் பட்சத்தில் வரும் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும். நகருக்கு வரும் குடிநீரை லாரிகள், டிராக்டர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பொதுமக்களும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.