தங்கம் தென்னரசு நிதிப் பங்கீடு, திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பினார். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டாட்சி தத்துவம், இந்தி திணிப்பு, மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்து மேலும் பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
Stalin questions central government : மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் GST சீர்திருத்தம் COOPERATIVE FEDERALISM என்பது வெற்று முழக்கமா? NEP, இந்தியை திணித்து தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா? உ.பி, குஜராத், மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தராதது ஏன்?
கேள்வி கேட்கும் தங்கம் தென்னரசு
புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்? மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி தர ஏன் இவ்வளவு தாமதம்? தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் பெயர் எதற்கு? 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ.975 கோடி நிதி எங்கே? என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 10 கேள்விகளை மத்திய அரசுக்கு எழுப்பியிருந்தார்.
இந்த பதிவை பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன் என அவரும் கேள்விகளை பட்டியலிட்டுள்ளார்.
கேள்விகளை பட்டியலிட்ட ஸ்டாலின்
- ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?
- நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
- ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
- பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?
- இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?
- கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? என முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
