எல்லையை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது - இந்திய கடற்படை அதிரடி
இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவரக்ளை கைது செய்வதும், படகுகளை சேதபடுத்துவதும் வழக்கம்.
இதற்கான நிரந்தர முடிவு இன்னும் தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர் சங்கத்தினர் டெல்லி சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக இந்தியா இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் 143 படகுகள் விடுவிக்கபடாமல் இருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதில், தமிழகத்தின் அளவு என்ன?, இலங்கையின் அளவு என்ன? ஏன் துப்பாக்கி சூடு, சிறைபிடிப்பு, என்னென்ன பிரச்சனைகள் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 60 மைல் தொலைவில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனால் தமிழக எல்லையில் பரபரப்பு நிலவுகிறது.