இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு சிறை - ராமநாதபுரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்தவர்களை வரும் 20 ஆம் தேதி வரை சிறை காவலில் வைக்க ராமநாதபுர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அடிக்கடி தமிழக மீனவரக்ளை கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும் வழக்கம்.
இதற்கான நிரந்தர முடிவு இன்னும் தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர் சங்கத்தினர் டெல்லி சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக இந்தியா இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் 143 படகுகள் விடுவிக்கபடாமல் இருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதில், தமிழகத்தின் அளவு என்ன?, இலங்கையின் அளவு என்ன? ஏன் துப்பாக்கி சூடு, சிறைபிடிப்பு, என்னென்ன பிரச்சனைகள் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 60 மைல் தொலைவில் மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் 7 பேரை இந்திய கடற்படையினர் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் 20 ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இலங்கை மீனவர்களுக்கு சிறை தண்டனை அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.