special trains due to bus strike

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் பொது மக்கள் ரயில் பயணத்துக்கு தாவியுள்ளனர். அரசின் வேண்டுகோளை ஏற்று தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஊழியர்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததையடுத்து, ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகம் முழுவதும் இன்றே தெரிழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்

தஞ்சாவூரில் 120க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள், 56 புறநகர் பேருந்துகளை பணிமனையில் நிறுத்திவிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில் போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை அருகில் உள்ள பணிமனைகளில் நிறுத்தி விட்டு போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

திருச்சியில் 50 சதவீத பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. கன்டோன்மென்ட், மலைக்கோட்டை பகுதிகளில் பேருந்துகளை இயக்க டிரைவர்கள் வரவில்லை. டீசல் போட கொண்டு வரும் பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னை அடையாறு பணிமனையில் இருந்து கிளம்பும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பல்லவன் இல்லம், மந்தைவெளியிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால், கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் உள்ளூர் பொது மக்கள் ஆங்காங்கே உள்ள லோக்கல் ரயில்களில் பணயிக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகள் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளனர். தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தையடுத்து அரசு கேட்டுக் கொண்டதால் சென்னை – நெல்லை , சென்னை – கோவை இடையே நாள்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.