கோவையில் இருந்து பெங்களூருக்கு வருகிற தீபாவளிக்குள், முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரட்டை அடுக்கு இரயில் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட மேலாளர் தெரிவித்தார்.
சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா வியாழக்கிழமை காலை கோவை வந்தார். பின்னர் அவர் இரயில் நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், முதல் நடைமேடையில் இருக்கும் பொதுக்கழிப்பிடம் சரியாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும், 2–வது சுரங்க நடைபாதையில் இருக்கும் தானியங்கி படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) சரியாக இயங்குவது இல்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.
உடனே அவர் அதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டார். ஊழியர்கள் நியமிக்கப்படாததால் அவற்றை சரியாக இயக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே 2 ஊழியர்களை நியமித்து, தானியங்கி படிக்கட்டுகளை இயக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கோவை தொழில் வர்த்தக சபையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “கோவை இரயில் நிலையத்தில் பலஅடுக்குகளை கொண்ட வாகன நிறுத்தம் (மல்டிலெவல் பார்க்கிங்) கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன நிறுத்தத்தை அமைக்க கோவையில் உள்ள தொழில் முனைவோர்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
இரயில் நிலையம் மற்றும் இரயில்களை ஒவ்வொருவரும் தங்களின் சொத்துக்களாக கருதி வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மாறாக ரெயில்களின் முன்பு போராட்டங்கள் நடத்துவது, இரயில் மற்றும் தண்டவாளத்தை சேதப்படுத்துவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
வடகோவை இரயில் நிலையம் சரக்கு இரயில்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் மையமாக செயல் பட்டு வருகிறது. இதனால் மாநகர பகுதிக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த மையம் இருகூர் இரயில் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது. இதை அனைத்து தொழில் நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோவையில் இருந்து பெங்களூருக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட இரட்டை அடுக்கு இரயில் (டபுள் டெக்கர்) விடப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது. அந்த இரயிலுக்கான டிக்கெட் கட்ட ணம், கால அட்டவணை இன்னும் வரவில்லை. எனவே அந்த இரயிலை வருகிற தீபாவளிக்குள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோன்று கேரளாவில் இருந்து கோவை வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி இரயிலை இரவு நேரத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக கேரளா மற்றும் கர்நாடகா இரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் பேசி ஆலோசிக்கப்படும்.
மேலும் போத்தனூர்–பொள்ளாச்சி அகல இரயில்பாதை பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. இன்னும் ஒருசில பணிகள் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். அந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத் துக்குள் முடிக்கப்படும். அதன் பின்னர் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு இரயில்கள் இயக்கப்படும்”.
என்று இரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.
