பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு.. எந்த எந்த ஊருக்கு தெரியுமா.? தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய செய்தி
பொங்கல் பண்டிகையை கொண்டாட லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஏற்கனவே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ளதால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்டத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
![Special train announcement for southern district on the occasion of Pongal festival KAK Special train announcement for southern district on the occasion of Pongal festival KAK](https://static-ai.asianetnews.com/images/01hhzxytttsprfgbqczfk7wye0/trains-cancelled_363x203xt.jpg)
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
தமிழர்களின் முதன்மை பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 14,15,16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. பணி நிமிர்த்தமாக சென்னைக்கு வந்தவர்கள் தங்களது சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் தங்கள் கிராமத்தில் கொண்டாட விருப்பப்படுவார்கள். அந்த வகையில் ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வார்கள்.
அவர்களுக்கு வசதியாக ரயில்வே துறை சார்பாக சிறப்பு ரயில் மற்றும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தெற்கு ரயில்வே சார்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு வருகின்ற 14 மற்றும் 16ஆம் தேதிகளில் 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்கள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு இரவு 10:45 மணிக்கு தூத்துக்குடிக்கு சென்று சேருகிறது. இதே போல தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 15 மற்றும் 17ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத 22 பெட்டிகளும், இரண்டு இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தூத்துக்குடிக்கு சென்று சேருகிறது.
சிறப்பு ரயில் இயக்கப்படும் தேதி என்ன.?
இதே போல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும் பொங்கல் சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது. அதன்படி வருகின்ற 11, 13 மற்றும் 16ஆம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது இரவு 9 மணி அளவில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை 11:15 மணிக்கு சென்று சேருகிறது. இதே போல நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 12. 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ரயிலானது இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 3. 15 மணியளவில் தாம்பரம் வந்து சேர்கிறது. இந்த சிறப்பு ரயிலில் 12 ஏசி பெட்டிகள், இரண்டு முன் வகுப்பு பெட்டிகள் இரண்டு முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கும் அரசுப் பேருந்துகள் மீதான அச்சத்தையும் அதிகரித்துள்ளது- டிடிவி தினகரன்