சட்ட விதிகளுக்கு உட்பட்டே சிறப்பு அதிகாரிகள் நியமனம் – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுதாக்கல்…
சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிகாலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் இவர்களின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து இந்திய அமைப்பின் சார்பில் பாடம் நாராயண் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அதனை மேற்கொள்ளமால் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது சட்டவிரோதமான நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறப்பு அதிகாரிக்கு கால நீடிப்பு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மனுவிற்கு பதிலளித்துள்ள தமிழக அரசின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, உள்ளாட்சி தேர்தலை கடந்த ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கபட்டது.
இதற்கான பணிகளை கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஏற்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது. தேர்தல் வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் உள்ளாட்சி அதிகாரிகள் பணியிடங்களக காலியாக வைக்ககூடாது என்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த அதிகாரிகளின் பதவி காலம் தற்காலிகமானது, அதுவும் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் வரை தான். எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.