Asianet News TamilAsianet News Tamil

பஸ் ஸ்டிரைக்கை சமாளிக்க கூடுதல் மின்சார ரயில்கள்... தமிழக அரசின் வேண்டுகோள்படி தெற்கு ரயில்வே அறிவிப்பு...

Special Electricity Trains from Today
special electricity-trains-from-today
Author
First Published May 15, 2017, 8:38 AM IST


ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.இந்த போராட்டத்தைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் முடிவு எட்டப்பாடாததால் இன்று முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நேற்றே வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று முதல் தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டதை போக்குவரத்துத் துறை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். இதன் தமிழகம் முழுவதும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளுக்கு மின்சார ரயில் சேவைகள் இருப்பதால் பஸ் ஸ்ட்ரைக்கை சமாளிக்க கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில்: தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழக அரசின் வேண்டுகோள்படி, இன்று முதல் கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.15, பிற்பகல் 3.08க்கு செங்கல்பட்டிற்கும், இரவு 7.30, இரவு 9.55 மணிக்கு தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து காலை மணி 8.10 மணிக்கு செங்கல்பட்டுக்கும், தாம்பரத்தில் இருந்து இரவு மணி 8.35க்கு சென்னை கடற்கரைக்கும் ரயில் புறப்படும்.

செங்கல்பட்டில் இருந்து காலை 9.25, பிற்பகல் 1.15, மாலை 5.15க்கு சென்னை கடற்கரைக்கு ரயில் இயக்கப்படும். இதன்மூலம் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் கூடுதலாக 16,200 பேர் பயணம் செய்ய முடியும்.சென்னை கடற்கரை -வேளச்சேரி மார்க்கத்தில் 10 ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. 

சென்னை கடற்கரையில் இருந்து காலை 11.10, பிற்பகல் 1.15, 2.55, மாலை 4.40, 6.30 வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும். வேளச்சேரியில் இருந்து பிற்பகல் 12.05, 2.05, 3.50, மாலை 5.30, 7.40க்கு சென்னை கடற்கரைக்கு ரயில்கள் இயக்கப்படும். இதன்மூலம் சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 13,500 பேர்  பயணம் செய்ய முடியும்.

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் மார்க்கத்தில் கூடுதலாக 9 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.15க்கு திருவள்ளூருக்கும், இரவு 10.45க்கு ஆவடிக்கும் ரயில்கள் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.30, மாலை 4.40க்கு திருவள்ளூருக்கும், இரவு 7.55க்கு  ஆவடிக்கும் ரயில்கள் புறப்படும். 

மேலும், திருவள்ளூரில் இருந்து காலை 11.45, பிற்பகல் 3 மணி, மாலை 6.15க்கு சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும். ஆவடியில் இருந்து இரவு 9.05க்கு சென்னை கடற்கரைக்கு ரயில் இயக்கப்படும். இதன்மூலம் சென்னை கடற்கரை - ஆவடி மார்க்கத்தில் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 12,150 பேர் பயணம் செய்ய முடியும்.

சென்னை  சென்ட்ரல் - ஆவடி - பொன்னேரி இடையே கூடுதலாக 7 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு பொன்னேரிக்கும், பிற்பகல் 1 மணி, 2.05க்கு எண்ணூருக்கும் ரயில் இயக்கப்படும்.

எண்ணூரில் இருந்து காலை 9.55க்கு சென்னை கடற்கரைக்கும், பிற்பகல் 1.55க்கு சென்ட்ரலுக்கும் ரயில் புறப்படும். பொன்னேரியில் இருந்து காலை 10.55 மணிக்கு சென்ட்ரலுக்கு ரயில் புறப்படும். ஆவடியில் இருந்து காலை 8.10 மணிக்கு எண்ணூருக்கு ரயில் புறப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios