புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்று தேவையில்லை... அறிவித்தது தெற்கு ரயில்வே!!
சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1 முதல் நீக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1 முதல் நீக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை புறநகர் ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் ரயில் பயணிகளுக்கும் தென்னக ரயில்வே புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், பயணசீட்டு மற்றும் மாதாந்திர பாஸ் பெறும் போது கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும், செல்போன் செயலி மூலமாக பயணச்சீட்டு பெறும் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு போன்ற விதிகள் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தன.
இந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1 முதல் நீக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ரயில்வே விதித்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் தான் பயணச்சீட்டு என்ற கட்டுப்பாட்டை ரயில்வே நிர்வாகம் நீக்கியது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் சென்னை புறநகர் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதை காண்பித்தால்தான் சீசன் டிக்கெட், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு டிக்கெட் வழங்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கட்டப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை நீக்கிய நிலையில் தெற்கு ரெயில்வேயிடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.