ஆட்டோ மீது காரை மோதிய ரஜினியின் மகள் - கமுக்கமாக முடித்தார் தனுஷ்
சென்னையில் காரை ஓட்டிகொண்டு வந்த ரஜினியின் மகள் சௌந்தர்யா ஆட்டோ மீது மோதினார். இதில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அக்காள் கணவர் தனுஷ் ஆட்டோ டிரைவருடன் சமாதானமாக கமுக்கமாக பேசி விவகாரத்தை முடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஐஷ்வர்யா , சௌந்தர்யா . இதில் ஐஷ்வர்யா நடிகர் தனுஷை மணந்துள்ளார். சௌந்தர்யா ரஜினியை வைத்து படம் எடுத்து அதனால் ரஜினிக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் மணம் முடித்து வைக்க அது தற்போது பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சவுந்தர்யா வெளியில் சென்றுவிட்டு அதிகாலை தனது காரில் டிடிகே சாலை வழியாக மௌபரீஸ் சாலை நோக்கி திரும்பி உள்ளார்.
அப்போது இடதுபுறம் நின்றிருந்த ஆட்டோ மீது மோத அது கவிழ்ந்துள்ளது. உள்ளே உறங்கி கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் மணி லேசான காயமடைந்தார். விபத்து நடந்தது அதிகாலை 4.30 மணி என்பதால் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை.
இதனால் உடனடியாக சௌந்தர்யா அக்காள் கணவர் தனுஷுக்கு போன் செய்ய அவர் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோ டிரைவருடன் சமாதானம் பேசி ஒரு கணிசமான தொகையை ஆட்டோ சேதம் மற்றும் சிகிச்சை செலவுக்காக கொடுத்ததால் ஆட்டோ டிரைவர் புகார் அளிக்கவில்லை.
சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு டிரைவருடன் சமாதானம் ஆனாலும் அது முறைப்படி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் முடிக்கப்பட வேண்டும். ஆனால் சினிமாவில் சட்டத்தையே கரைத்து குடித்து வசனம் பேசும் விஐபிக்கள் நிஜ வாழ்க்கையில் ஜீரோவாக இருக்கிறார்கள்.
ஆட்டோ டிரைவர் என்னதான் அப்போதைக்கு சமாதானம் ஆனாலும் அவர் மீண்டும் ஒரு வக்கீல் மூலம் சௌந்தர்யா தனது ஆட்டோவை இடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார் என்று போலீசில் புகார் அளிக்க முடியும்.
இதில் போலீசார் வழக்குப்பதிவு செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட் மூலமாகத்தான் சௌந்தர்யா ஜாமீன் பெற முடியும். இது போன்ற விஷயங்கள் தெரியாததால் சிக்கிகொண்டு தடுமாறுகின்றனர்.
இதே போன்றதொரு சம்பவத்தில் போதையில் போலீஸ் வாகனத்தின் மீது காரை மோதிய நடிகர் அருண்விஜய் எளிமையாக முடிக்க வேண்டிய வழக்கில் தப்பி ஓடி தலைமறைவாக பின்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவருக்கு உதவிய உதவி கமிஷனர் இன்று வரை சிக்கலில் இருக்கிறார்.
இந்த விவகாரத்தை மறைக்க முயன்றாலும் அது மெல்ல கசிந்து வெளியே வந்துவிட்டதால் பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.