பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு; "எமிஸ்" செயலியை வெளியிட்டது தமிழக அரசு...
சேலம்
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதற்காக பிரத்தியேகமாக "எமிஸ்" செயலியை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி மாணவர்களின் புகைப்படங்கள், இரத்த வகையை ஆண்டராய்டு செல்லிடப்பேசி மூலம் பதிவேற்றம் செய்து, ஸ்மார்ட்கார்டு தயாரிக்கும் பணியை விரைவுப்படுத்தலாம்.
பள்ளி மாணவ, மாணவியர்களின் விவரங்களை பதிவு செய்ய தமிழக அரசின் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளம் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.
இதன் மூலம் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் தொகுக்கப்படுவதால் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரியாக கையாளப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் பயில்வோருக்கு அரசின் 16 வகையான நலத் திட்டங்களும் கிடைப்பது முறைப்படுத்தப்படுவதன்மூலம் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், கடந்த மாதம் முதல் "எமிஸ்" இணையதளத்தை அனைத்து மாவட்டத்தினரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால் முடங்கிப் போனது. இதனால் எமிஸ் இணையப்பகுதியை திறக்கவோ, பதிவேற்றம் செய்யவோ இயலவில்லை.
இதனையடுத்து கடந்த வாரம் இந்த இணையதளத்தை 16 மாவட்டங்கள் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளிலும், மீதமுள்ள 16 மாவட்டங்கள் செவ்வாய் , வியாழன் , சனிக் கிழமைகளிலும் பதிவேற்றும் செய்யும் வகையில் இணையதளப் பகுதி சரிசெய்யப்பட்டது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு தயாரிப்பதற்காக பிரத்தியேகமாக "எமிஸ்" செயலியை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதில் மாணவர் புகைப்படங்களை ஆண்டராய்டு செல்லிடப்பேசி மூலம் பதிவேற்றம் செய்யலாம். இரத்த வகையை சேர்க்கலாம். ஆதார், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து திருத்தம் செய்யலாம். இந்த செயலி, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியை விரைவு செய்ய ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தச் செயலியால் ஆசிரியர்கள் இணையதள மையங்களை தேடிச் செல்லத் தேவையில்லை.
இந்சச் செயலி மூலம் மாணவர்களை சேர்க்க, நீக்க வசதி இன்னும் ஏற்படுத்தவில்லை. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம்.
வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், ‘எமிஸ்’ இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.