எமன் போல எருமை மீது உட்கார்ந்துகொண்டு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு...
சேலம்
சேலத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு எமன் போல எருமை மீது உட்கார்ந்துகொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவரால் அந்தப் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத் தீர்ப்பு முகாம் நடைப்பெற்றது.
இதில், தாதகாபட்டி சஞ்சீவராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் எருமை மீது உட்கார்ந்தபடி மனு கொடுக்க வந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், அவரை எருமை மீதிருந்து கீழே இறங்கச் செய்து, அந்த எருமையை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கட்டிப் போட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மனு அளிக்க வந்த பார்த்திபன் கூறியது:
"சேலத்தில் பாதாள சாக்கடைப் பணிகள், மேம்பாலப் பணிகள், தனிக்குடிநீர் திட்டப் பணிகள், திருமணிமுத்தாறு அபிவிருத்தி திட்டம் ஆகியப் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்காததால், சாலைகள் குண்டும், குழியுமாய் மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்க கோரி ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.