வருகிற 18-ஆம் தேதி அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை - ஊரக வளர்ச்சி ஊழியர்கள் முடிவு...
விருதுநகர்
குறைந்தபட்ச ஊதியம் வழங்காவிட்டால் வருகிற 18-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்ட முடிவு எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது.
இதற்கு மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
அதன்பின்னர் கூட்டத்தில், "தமிழகத்தில் உள்ள 12524 கிராம பஞ்சாயத்துகளில் பல்லாயிரக்கணக்கான துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை வாய்ப்புத்துறை, பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.354-ம், மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு ஊதியமாக தினசரி ரூ.435-ம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இந்த உத்தரவை அமல்படுத்தக்கோரி பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை இயக்குனர், சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், பலன் ஏற்படவில்லை.
எனவே, அரசு உத்தரவிட்டபடி உடனடியாக குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். வழங்காவிட்டால் இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 18-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தினர் சார்பில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்" என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.