seyadu beedi cheated 161 crores

செய்யது பீடி நிறுவன குழுமம், 161 கோடியே 56 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு சார்பிலும் நடவடிக்கை பாயாலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செய்யது பீடி குழுமம் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் , 63 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 5 கோடியே 74 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்த ஆவணங்களை மதிப்பீடு செய்த போது, அதில் கணக்கில் காட்டாத பீடி விற்பனையின் மூலம் 46 கோடியே 10 லட்சம் ரூபாயும், செலவு செய்ததாக ஆவணங்கள் தயார் செய்து 49 கோடியே 50 லட்சம் ரூபாயும் செய்யது நிறுவன குழுமம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத நூல் மற்றும் கழிவு பருத்தி மூலம் 8 கோடியே 10 லட்சம் ரூபாயும், ஊழியர்கள் பெயரில் 13 கோடி ரூபாயும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் மூலம் 44 கோடியே 86 லட்சம் ரூபாயும் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வரி ஏய்ப்பு குறித்து உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாகவும், உரிய விளக்கம் அளிக்கப்படாத வகையில் வருமானவரித்துறையுடன், அமலாக்கப்பிரிவு சார்பிலும் நடவடிக்கை பாயலாம் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.