Senkottaiyan Changes in School Education department

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் விரைவில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில், இன்று சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அப்போது, தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 19 சதவிகிதமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த விகிதம் 7 சதவிகிதமாக உள்ளதென்றும், அளவான குடும்பத்தின் மூலம் வளமான வாழ்வு வாழும் எண்ணம் இந்த மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித் துறையில் விரைவில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும். சுதந்திர தின விழாக்களில் மாணவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும்.

விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் மைதானம் அமைக்கப்படும். செயல்படாமல் இருக்கும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆண்டுக்கு மூன்று முறை பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கும் ஆசிரியர்களுக்குக் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும். பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்திருக்கும் பள்ளிகளுக்குப் புதுமை விருதும் ரூ.2 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும்” என்று தெரிவித்தார் செங்கோட்டையன்.