அமித்ஷா சொல்லி செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்து இருந்தார். இப்போது செங்கோட்டையன் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக அரசியலின் மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். தவெக பாஜக பி டீம் என்றும் அதிமுகவை காலி செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் செங்கோட்டையனை பாஜக திட்டமிட்டு விஜய் கட்சியில் இணைத்துள்ளதாகவும் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் குற்றம்சாட்டின.
அமித்ஷா சொல்லி தான் இணைந்தார்
இதற்ககிடையே அமித்ஷா சொல்லி தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக ஈரோட்டில் புதிய திராவிடர் கழக மாநாட்டில் பேசிய உதயநிதி, ''இந்தப்பகுதியைச் சேர்ந்த மூத்த முன்னாள் அதிமுக அமைச்சர் (செங்கோட்டையன்) ஹரித்வார் போறேன், ஆன்மீக பயணம் செல்கிறேன் என்று போய் அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்தார். பார்த்துட்டு வந்து, அவருடைய ஆலோசனைப்படி இன்றைக்கு இன்னொரு கட்சியில் போய் அவர் சேர்ந்துவிட்டார்.
கட்சி மாற்றமில்லை; பிரான்ச் மாற்றம்
அதிமுகவில் இருக்கக்கூடிய மூத்த முன்னாள் அமைச்சர்கள் கூட இன்றைக்கு எந்த கட்சியில் சேரவேண்டும் என்று பி.ஜேபியிடம் அனுமதி வாங்கிவிட்டுதான் சேர்கிறார்கள். அந்த அளவிற்கு Head Office அவர்களை கன்ட்ரோல் செய்து வைத்துள்ளது. இதெல்லாம் நாம் நினைக்கின்ற மாதிரி கட்சி மாற்றம் கிடையாது. Just, Branch மாற்றம் தான். இன்றைக்கு யார் வேண்டுமானாலும், எத்தனை கிளைகள் வேண்டுமானாலும் மாறட்டும், இல்ல தாவட்டும். யார் வந்தாலும் மேற்கு மண்டலத்தில், திமுகவினுடைய வெற்றியை நம்முடைய கூட்டத்தினுடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது'' என்று கூறியிருந்தார்.
தெளிவான முடிவெடுத்துள்ளேன்
இந்த நிலையில், உதயநிதியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த செங்கோட்டையன், யார் சொல்லியும் தவெகவில் இணையவில்லை. தானாகவே இணைந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ''நான் தெளிவாக முடிவெடுத்து தான் தவெகவில் இணைந்தேன். யார் சொல்லியும் தவெகவில் இணையவில்லை. ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி அதிமுகவில் இருந்து அனுப்பினார்கள். என்னுடைய பயணங்கள் சரியாகத்தான் இருக்கும்'' என்று கூறியுள்ளார்.


