ஈரோட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், செங்கோட்டையன் அமித் ஷாவின் ஆலோசனையின் பேரில் த.வெ.க.வில் இணைந்ததாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமி திராவிட சித்தாந்தத்தை மறந்து, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக விமர்சித்தார்.

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செங்கோட்டையன் கிளை மாறி இருக்கிறார்!

சமீபத்திய அரசியல் மாற்றம் குறித்துப் பேசிய உதயநிதி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்தது குறித்துப் பேசினார்.

"அமித் ஷாவின் ஆலோசனைப்படியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். தற்போது அவர் கட்சி மாறவில்லை. ஒரு கட்சியின் வேறு ஒரு கிளைக்குதான் தாவி இருக்கிறார். இதன்மூலம், த.வெ.க. ஒரு சுதந்திரமான கட்சி அல்ல என்றும், அது பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது” என்று உதயநிதி குற்றம் சாட்டினார்.

இ.பி.எஸ். மனதில் அமித் ஷா!

எடப்பாடி பழனிசாமி திராவிட சித்தாந்தத்தை மறந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க.வின் இன்றைய நிலையைப் பற்றி விமர்சித்தார்.

"தங்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடம் என்ற சொல்லை வைத்துக்கொண்டு, அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி. அவர் திராவிடத்தை மறந்துவிட்டார், அண்ணாவை மறந்துவிட்டார், எம்.ஜி.ஆரையே மறந்துவிட்டார்” என்றார்.

"இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமி மனதில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் இருப்பது அமித் ஷா மட்டும்தான்," என்று அவர் சாடினார்.

யார் சிறந்த அடிமை?

அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.விடம் அனுமதி பெற்றே கட்சிகளில் இணைகிறார்கள் என்றும், பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. இயங்குவதாகவும் துணை முதல்வர் உதயநிதி குற்றம் சாட்டினார்.

"அ.தி.மு.க.வில் உள்ளவர்கள் யார் சிறந்த அடிமை என்று நிரூபிக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் கூட பா.ஜ.க.விடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கிவிட்டுத்தான் சேர்கிறார்கள். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. உட்பட பல கட்சிகளுக்கு அமித் ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது," என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.