செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் பின்னணியில் பாஜக இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியைத் தனிமைப்படுத்தி, தேர்தலுக்குள் அதிமுகவை முழுமையாகக் கையகப்படுத்துவதே பாஜகவின் சதித் திட்டம்.

தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார். அதற்கு பின் பாஜக முழுமையாக அதிமுகவை கையகப்படுத்தும். அதற்கான உத்திகளை தொடங்கி விட்டது என வன்னி அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:- அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடிகர் விஜய் தலைமையில் தவெகவில் இணைவதற்கு பின்னால் பாஜக தான் இருக்க வேண்டும். ஏனென்றால், அதிமுகவிலிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டவுடனே தில்லிக்கு பறந்து அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். “அமித்ஷாவை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம்” என ஆலோசனை கேட்கத்தான் வந்ததாக வெளிப்படையாக சொன்னார்.

இப்போது, தவெகவில் இணைவதும் அமித்ஷாவின் அலோசனை தானா என்னும் அய்யம் எழுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தடுமாற வைத்து, பாதிக்கு பாதி தொகுதிகளை பெறுவது தான் பாஜகவின் உத்தி. (பீகார் போல) ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.

தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார். அதற்கு பின் பாஜக முழுமையாக அதிமுகவை கையகப்படுத்தும். அதற்கான உத்திகளை பாஜக தொடங்கி விட்டது. நடிகர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நடிகர் விஜய்யை ஏற்றுக்கொள்வதில் எந்த மனத்தடையும் இருக்காது என்பதையே செங்கோட்டையன் தவெகவில் இணைவதை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.