Asianet News TamilAsianet News Tamil

விரக்தியின் விளிம்பில் பேசும் மோடி... தொடர்ந்து பேச பேச பாஜக படுதோல்வி அடைவது உறுதி- செல்வப்பெருந்தகை

2024 மக்களவைத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா ? சாவா ? என்பதே பிரச்சினை என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை,  இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது என கூறியுள்ளார். 
 

Selvaperundhai has criticized Prime Minister Modi as being on the verge of despair KAK
Author
First Published May 1, 2024, 7:05 AM IST

பதற்றத்தோடு மோடி

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பேச்சு தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்களவைத் தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன் என்று  பேசியிருக்கிறார். 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி இடஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல என்பது புரியாமலேயே ஆட்சி நடத்தியிருக்கிறார். 

முதல்முறையாக ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் பிரியங்கா காந்தி.. அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி

மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சி

சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன. இந்த அடிப்படையை புரிந்து பேசுகிறாரா ? அல்லது திட்டமிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் மக்களை திசைத் திருப்புவதற்கு புல்வாமா, பாலகோட் தாக்குதலை பரப்புரையில் தவறாக பயன்படுத்தி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

இட ஒதுக்கீடு வழங்குவது எப்படி.?

தற்போது, இஸ்லாமியர்களுக்கு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று ஆதாரமற்ற நச்சுக் கருத்தை கூறி ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறார். இந்து மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினரை அந்தந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திரட்டுகிற புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதிகள் தேர்வு செய்யப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதே நடைமுறை தான் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. அதனடிப்படையில் தான் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 

வட மாநிலங்களில் எதிர்ப்பு அலை

உண்மைநிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி  பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி இந்தியாவின் கோயபல்ஸ் ஆக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் இத்தகைய பேச்சுகளின் மூலம் 10 ஆண்டுகாலம் பிரதமர் பதவி வகிக்கிற அவருக்கு வரலாற்றில் அழிக்க முடியாத கரையை ஏற்படுத்தி வருகிறார்.  கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, போன்றவற்றின் காரணமாக மக்களிடையே பா.ஜ.க. மீது கடுமையான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது.  

இந்திய மக்களுக்கு வாழ்வா ? சாவா ?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. நாட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் 20, 25 கோட்டீஸ்வரர்கள் 45 சதவிகித மொத்த சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு துணை போனவர் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. இதன்மூலம் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூபாய் 8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. எனவே, 2024 மக்களவைத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா ? சாவா ? என்பதே பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். 

பாஜக படு தோல்வி உறுதி

இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது.  மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019 இல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024 இல் மக்களை ஏமாற்ற முடியாது. மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படுவதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. பிரதமர் மோடியின் இத்தகைய மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 

ராமர் கோவில் விழாவுக்கு ஜனாதிபதியை அழைக்கவில்லையா? ராகுல் காந்திக்கு பதிலடி.. அறக்கட்டளை விளக்கம்!

Follow Us:
Download App:
  • android
  • ios