என் மீதான வழக்கை ரத்து செய்யுங்களேன்... - நீதிமன்றத்தில் மனு போட்ட சேகர் ரெட்டி...!
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து சேகர் ரெட்டியை விடுவிக்க கோரிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பரில் வருமானத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில், 178 கிலோ தங்கம் மற்றும் 148 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இதில் ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், தன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி சேகர் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி பிரேம்குமார், ஸ்ரீனிவாசலு உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுவிற்கு 2 வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.