நிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை மிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும், வெளியில் வரமுடியாதபடி காவல்துறையைக் கொண்டு அடைத்து வைப்பதும், கைது செய்து சிறைப்படுத்துவதும் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும் என சீமான் தெரிவித்துள்ளார்.  

பரந்தூரில் விமான நிலையம்

பரந்தூரில் புதிய பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதனை எதிர்த்துப் போராடிய அப்பகுதி மக்கள் 138 பேர் மீது திமுக அரசு மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் தொடர் கோரிக்கையினை மதிக்காமல் வானூர்தி நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியதைக் கண்டித்து மக்களாட்சியின் அடிப்படை உரிமையான அறவழியில் போராடும் மக்கள் மீது வழக்கு, கைது என்று அடக்குமுறைகளை ஏவி, அச்சுறுத்துவது கொடுங்கோன்மையாகும்.

இது தான் திராவிட மாடலா?

மண்ணுக்கும், மக்களுக்கும் எதிரான அழிவுத் திட்டங்களைத் தொடர்ந்து மக்கள் எதிர்த்து வரும் நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் 'எல்லார்க்கும் எல்லாம்' கிடைக்கச் செய்கின்ற சமூக நீதியா? நிலங்களை வழங்க மறுக்கும் விவசாயிகளை மிரட்டி திமுக அரசு அச்சுறுத்துவதும், வெளியில் வரமுடியாதபடி காவல்துறையைக் கொண்டு அடைத்து வைப்பதும், கைது செய்து சிறைப்படுத்துவதும் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். இதே அடக்குமுறைகள் தொடர்ந்தால் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அப்பகுதி மக்கள் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசிற்கும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கும் தக்க பாடம் புகட்டுவார்கள்.

திமுக அரசு கை விட வேண்டும்

ஆகவே, தங்களின் நிலங்களைத் தர மறுத்து, பரந்தூர் புதிய வானூர்தி நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களைக் கைது செய்யும் போக்கினை திமுக அரசு நிறுத்துவதோடு, அம்மக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், வேளாண் விளைநிலங்களையும், நீர்நிலைகளையும், மக்களின் குடியிருப்புகளையும் அழித்து பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்குத் துணைபோவதையும் திமுக அரசு கைவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்வதாக சீமான் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.