வருங்காலத்தில் காவலாளர்களின் வாரிசுதாரர்கள் சாதனையாளர்களாக வர வேண்டும்…
திருவாரூர்,
வருங்காலத்தில் காவலாளர்களின் வாரிசுதாரர்கள் சாதனையாளர்களாக வர வேண்டும் என்று மாவட்ட காவல் சூப்பிரண்டு மயில்வாகனன் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலாளர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி திருவாரூரில் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் சூப்பிரண்டு மயில்வாகனன் கலந்து கொண்டு உதவித்தொகையை வழங்கினார்.
“பள்ளி பருவம், வாழ்க்கையை வழி நடத்துகின்ற பருவம். அந்த பருவத்தில் இலக்கு வைத்து படிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு நிச்சயமாக இருக்கும். அந்த இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாக உழைத்தால் இலக்கை அடையலாம். வருங்காலத்தில் காவலாளர்களின் வாரிசுதாரர்கள் சாதனையாளர்களாக வர வேண்டும். வாழ்க்கையில் உயர்ந்த பதவிக்கு சென்று பெற்றோர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்று மயில்வாகனன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் சூப்பிரண்டு அப்துல்லா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இலக்குமணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.