வி.ஏ.ஓ.வின் டார்ச்சரால் 2-வது மனைவி தூக்கிட்டு தற்கொலை! தலைமறைவாக இருந்த வி.ஏ.ஓ. கைது!
முதல் திருமணத்தை மறைத்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு, பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததால், மனமுடைந்த அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாகி இருந்த விஏஓ செல்வராஜ் 5 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா. பட்டப்படிப்பு முடித்த இவர், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படித்து வந்தார். முத்துசேர்வமடத்தில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தார் செல்வராஜ். வி.ஏ.ஓ. அலுவலகம் சென்று வந்த புஷ்பாவுக்கும், செல்வராஜக்கும் ஏற்பட்ட பழக்கம் திருமணம் வரை சென்றுள்ளது. செல்வராஜ், புஷ்பாவிடம் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி, தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் புஷ்பாவை திருமணம் செய்துள்ளார்.
குடும்பத்தாருக்கு தெரியாமல் புஷ்பாவை திருமணம் செய்து கொண்ட செல்வராஜ், புஷ்பாவுடன் மறைமுகைமாகவே வாழ்ந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், புஷ்பா, செல்வராஜிடம் மறைமுக வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை. தாலி கட்டிக் கொண்டு மறைமுக வாழ்க்கை வாழ்வதா என்று கேட்டுள்ளார்.
இதனைக் கேட்ட செல்வராஜ், புஷ்பாவை கடுமையாக தாக்கியதாவும், மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது. இது தொடர்பா இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. புஷ்பாவுக்கு பாலியல் ரீதியாகவும் செல்வராஜ் டார்ச்சர் அளித்துள்ளார். இதனால் மனமுடைந்த புஷ்பா, 5 மாதங்களுக்கு முன்பாக, செல்வராஜ் கட்டிய தாலியை அறுத்தெறிந்துவிட்டு, வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புஷ்பா இறந்ததை அடுத்து, அவரது தாயார் சுகுணாவதி, புஷ்பாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சுகுணாவதி அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். புஷ்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், வி.ஏ.ஓ. செல்வராஜுக்கு சம்பந்தம் இருப்பதாக போலீசார், அவரை விசாரிக்க திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் வி.ஏ.ஓ. செல்வராஜ் தலைமறைவானார்.
தலைமறைவான செல்வராஜை, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சென்னை, குன்றத்தூரில் செல்வராஜ் மறைந்திருப்பதாக மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை, குன்றத்தூர் வந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த வி.ஏ.ஓ. செல்வராஜை, அவர்கள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வராஜ், மீன்சுருட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செல்வராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.