தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலையால் தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பொங்கல் பண்டிகை முன்பாகவே பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் இன்று முதல் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு, தமிழக அரசு அனுமதியளித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள்,மாணவர்கள் பள்ளிக்கு வர தடை. மதிய உணவு இடைவேளையில் மாணவர்கள் கூட்டமாக அமர வேண்டாம்.
ஆசிரியர்களும், மாணவர்களும் நாள் முழுவதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.2 வேளை கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வகுப்பறை நுழையும் முன் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும், கொரோனா பரிசோதனை செய்திருந்தால் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசியும்,15-18 வயது சிறார்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம். அறிகுறி உள்ள மாணவர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், முகக்கவசம் அணிவது,சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள், பெற்றோர்கள் விரும்பினால் ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம். எனினும்,நேரடி வகுப்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிட்டதட்ட 40 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
