திருப்பூரில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி; மருத்துவமனைகளின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் புகார்…
திருப்பூர்
திருப்பூரில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானதாற்கு திருப்பூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளின் அலட்சியமே காரணம் என்று புகார் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டனர்.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த தோட்டத்துப்பாளையம் ஜி.என் நகரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கணேசன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் கௌதம்ராஜ் (14). இவர் விஜயமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கௌதம்ராஜூக்கு ஒரு வாரமாக மர்ம காய்ச்சல் இருந்ததால் சிகிச்சைப் பெறுவதற்காக பெற்றோர் அவனை கடந்த 2–ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர் சாதாரண காய்ச்சல் என்று கூறி அனுப்பி விட்டனராம். ஆனால் காய்ச்சல் தீவிரமடைந்ததால் சிறுவனை மீண்டும் நேற்று முன்தினம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் உடனடியாக கௌதம்ராஜை அழைத்துக் கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற கௌதம்ராஜ் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் கௌதம்ராஜின் மரணத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளின் அலட்சியமே காரணம் என்றுக் கூறி இறந்த மாணவனின் உறவினர்கள் நேற்று காலை திடீரென தோட்டத்துப்பாளையம் பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காவலாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.