"கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால்,  இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கொண்டாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவன் மோகித் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் மோகித் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரூ.3 லட்சம் நிவாரணம்

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்' என்று கூறப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்த நிலையில், தமிழக அரசு பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?

உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

மாணவர்கள் உயிரோடு விளையாடும் அரசு

பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா? பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்

உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு பொம்மை முதல்வர் ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.