School Opening Will Be delayed Due to Heatwave
முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகம் வரலாறு காணாத வெப்பத்தால் தகித்து வருகிறது. ஆந்திராவில் இயல்புக்கு அதிகமாக நிலவும் வெப்பம் வடமேற்கு காற்றால் தமிழகத்திற்கு பரவியுள்ளதாகவும், இதனால் அனல் காற்று தொடர்ந்து வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு கூடிக் கொண்டே சென்று கொண்டிருக்கையில், பள்ளிகளுக்கான மே மாத விடுமுறை நிறைவடைவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ளன. பெரியவர்களால் கூட தாங்க முடியாத படி வெயில் அடித்து வருவதால் இந்த வருடம் பள்ளிகள் திறக்கப்படுவது கால தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் கோடைகாலம் முடிந்து பள்ளிக் கூடம் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டறிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மாசிலாமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்தக் குழுவினர் நடத்தும் ஆய்வில், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் கூறினார்.
