சசிகலா எந்தத் தப்பும் பண்ணலை….உச்சநீதிமன்றம் அவரை விடுவிக்க வேண்டும்… சொல்கிறார் நாஞ்சில் சம்பத்….
பதவியிலும் , அதிகாரத்திலும் இல்லாததால் சசிகலா மீதான குற்றச்சாட்டு பொருந்தாது என்றும் அதனால் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் உறுதி செய்ததால் சசிகலா, இளவரசி மற்றும் தாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.
அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல என கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், சசிகலா பதவியிலும், அதிகாரத்திலும் இல்லாததால் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
சசிகலா மீதான குற்றச்சாட்டு எந்த வகையிலும் பொருந்ததாது என தெரிவித்த நாஞ்சில் சம்பத், அவரது மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் பரிவுடனும், கனிவுடனும் பரிசீலித்து சசிகலாவை விடுவிக்க வேண்டும் என கூறினார்.