எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகருக்கும், முதலமைச்சருக்கும் சேலை, நைட்டி அனுப்பும் போராட்டம்…
ஈரோடு
18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து சபாநாயகர் தனபாலுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சேலை, ‘நைட்டி’ அனுப்பும் நூதனப் போராட்டம் ஈரோட்டில் நடைப்பெற்றது
அதிமுக கட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நம்பிகையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். ஆளுநரிடம் மனு அளித்தனர். எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றம் வரை சென்றார்.
இந்த நிலையில் கட்சித் தாவல் சட்டத்தின்படி 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டார்.
இந்த தகுதி நீக்கத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரியும் கொங்குநாடு வேட்டுவக்கௌண்டர் இளைஞர் நல சங்கம் சார்பில் சபாநாயகர் தனபாலுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சேலை, ‘நைட்டி’ அனுப்பும் நூதனப் போராட்டம் ஈரோட்டில் நேற்று நடைப்பெற்றது.
இச்சங்கத்தின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெகதீசன் இந்தப் போராட்டத்திற்கு தலைமைத் தாங்கினார்.
சங்கத்தினர் ஈரோடு தலைமை தபால் அலுவலகத்திற்கு வந்து சேலை, ‘நைட்டி’யை பார்சல் செய்து சபாநாயகருக்கும், முதலமைச்சருக்கும் தபால் மூலமாக அனுப்பி வைத்தனர்.