வருமான வரித்துறையில் நாலே முக்கால் கோடி தண்டம் அழுத சரத்குமார்... காட்டி கொடுத்த வாட்ஸ் ஆப்..!!!
ச.ம.க. தலைவர் சரத்குமார் வீட்டில் ரெய்டோற்சவம் நடந்ததும், பின் அவரை தங்கள் அலுவலகத்துக்கே அழைத்து வருமான வரித்துறை மணிக்கணக்கில் விசாரணையில் வெச்சு செஞ்சதும், பிறகு ராடான் அலுவலகத்தினுள்ளும் புகுந்து ஃபைல்களை புரட்டியெடுத்து வருமான வரி கட்டாமலிருப்பதை கண்டுபிடித்ததும் சற்று ஆறிப்போன செய்திதான்.
ஆனாலும் அந்த ரெய்டுக்கான நதிமூலம், ரிஷிமூலம் ஆகியன முழு அளவில் இன்று வரை வெளிவரவில்லை. புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், டிரெய்லர் மாதிரி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதை கசிய விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தான் கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு முரண்பட்டு வெளியேறுவதும், பின் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு மீண்டும் இணைவதும் சரத்துக்கு சப்பை மேட்டர்.
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து காலையில் வெளியேறுவார், மாலையில் மீண்டும் சேர்வார் பின் பத்து நாட்கள் கழித்து ‘எங்களின் சுயமரியாதை இங்கு தொடரணுமா என்று யோசிக்க வைக்கிறது.’ என்பார் பின் பனிரெண்டாவது நாளில் ‘தாயுள்ளத்தோடு அரவணைத்தார் மாண்புமிகு அம்மா’ என்பார்.
இப்படி ஜெ., இருக்கும்போது சரத் பூசிய அரசியல் அரிதாரங்கள் தசாவதாரமில்லை...தவுசண்ட் அவதாரங்கள்.
ஆனால் ஜெ., மறைவுக்கு பின் அ.தி.மு.க. கூட்டணியில் சரத்தின் இருப்பு கண்டுகொள்ளப்படாத நிலையானது.
இந்நிலையில் பன்னீர்செல்வம் ’பதவி விலக சொல்லி என்னை சசி டீம் டார்ச்சர் செய்தார்கள்’ என்று கண்ணீர் வடித்தபோது ‘ஒரு முதல்வரென்றும் பாராமல் பன்னீரை வர்புறுத்தியதை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.’ என்று ச.ம.க. தரப்பிலிருந்து உச்ச்ச்ச் கொட்டினர்.
இதற்கு எங்கிருந்தும் எந்த ரியாக்ஷனுமில்லாததால் நீண்ட அமைதிக்கு போனார் சரத். திடீரென ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனுக்கு ஆதரவு என்று ஒரு அறிக்கை தட்டினார்.
அந்த அறிக்கையின் ஈரம் காய்வதற்குள் கொட்டிவாக்கத்தில் சரத் வீட்டின் காலிங்பெல்லை ‘கினிங் கினிங்...’ என்று அமுக்கியது வருமான வரித்துறை. அதன் பிறகு நடந்த காட்சிகள் உலகமறிந்தது.
தினகரனை ஆதரிக்கும் நிலையை எடுப்பதற்கு கைமாறாக சரத்குமாருக்கு சில கோடி ரூபாய் வழங்கப்பட்டது, அதன் அடிப்படையிலேயே ரெய்டு நடந்தது என்று அதிகார மட்டங்களிலிருந்து அப்போதே தகவல் பரவியது.
இந்நிலையில் சரத் தரப்புக்கு அப்படியொரு தொகை போனதாக விஜிலென்ஸுக்கு போட்டுக் கொடுத்தது யார்? தினகரன் தரப்பிலேயே ஒரு பிளாக் கோட் இருக்கிறதா அல்லது இந்த டீமுக்குள் உளவாளியை வைத்து பன்னீர் அணி அதிரடி செய்கிறதா? என்று பரபர பட்டிமன்றமே நடந்தது.
ஆனால் ’ஒரு வாட்ஸ் அப் சாட்டிங்கை கண்காணித்துதான் இந்த பண பரிமாற்ற தகவலை அதிகாரிகள் வட்டாரம் பிரிவு கண்டுபிடித்தது.’ எனும் தகவல் இப்போது கசிந்திருக்கிறது.
தினகரனின் உள்வட்டாரத்தை சேர்ந்தவர்களின் போன் பேச்சுகள் மட்டுமில்லை வாட்ஸ் அப், டெலிகிராம், இமோ உள்ளிட்ட எந்தெந்த சோஸியல் மீடியா வழியாக அவர்கள் தகவல் பரிமாறுகிறார்களோ அவை அத்தனையையும் கண்காணித்தததாம் அதிகார மையம்.
அப்போதுதான் தினகரன் மற்றும் சரத் இரு தரப்புகளுக்கு இடையிலான வாட்ஸ் ஆப் சாட்டிங் ஒன்று இந்த பணபரிமாற்றம் பற்றிய துணுக்குகளை காட்டிக் கொடுத்தன, அதை ஸ்மெல் செய்தே ரெய்டு நடத்தப்பட்டது என்கிறார்கள்.
ரெய்டுக்குப் பின் சம்பந்தப்பட்ட துறையிடம் நாலே முக்கால் கோடியை மூக்கால் அழுதபடி கட்ட வேண்டிய நிலை அந்த பாடி பில்டருக்கு ஏற்பட்டதாம்.
ஹும்! மொபைல் காஸ்ட்லியா இருந்து என்ன பண்ண, சாட்டிங் வீக்கா இருக்குதே.