மணல் கடத்திவந்த லாரி படுவேகமாக மோதியதில் விவசாயி நிகழ்விடத்திலேயே பலி...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மணல் கடத்தி வந்த மினி லாரி படுவேகமாக மோதியதில் விவசாயி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசங்கர் (35). விவசாயியான இவர் நேற்று விண்ணமங்கலம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
தனது கிராமத்தில் இருந்து சிறிது தூரம் சென்றபோது செய்யாறு ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்திவந்த மினி லாரி திடீரென உதயசங்கர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது படுவேகமாக மோதியது.
இந்த விபத்தில் உதயசங்கர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் தெள்ளூர் கிராம மக்கள் மற்றும் உதயசங்கரின் உறவினர்கள் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் விண்ணமங்கலம் ஆறு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், "எங்கள் ஊர் வழியாக மணல் கடத்தி செல்லும் லாரிகள் வரக் கூடாது" என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்தவுடன் செய்யாறு உதவி ஆட்சியர் (பொறுப்பு) அரிதாஸ், போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சின்னராஜ், சேத்துப்பட்டு ஆய்வாளர் ஜோதி, சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள், "இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் உதயசங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து பெரியகொழப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மினிலாரி ஓட்டுநர் சுந்தரசாமியை கைது செய்தனர்.
இறந்த உதயசங்கருக்கு விஜயலட்சுமி (25) என்ற மனைவியும், காவ்யா (9) என்ற மகளும், சரவணன் (7), சரண் (5) என்ற 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.