சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியில் திருவிழாவிற்காக எடுத்துச் செல்லப்பட்ட பட்டாசுகள் வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவில் வெடிக்க கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேட்டை சேர்ந்த செல்வராஜ் இருசக்கர வாகனத்தில் 300 கிலோ நாட்டு பட்டாசு மூட்டையை வைத்துக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது பூசாரிப்பட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதியில் சென்றபோது சாலையோரம் எரிந்து கொண்டிருந்த குப்பையில் வந்த தீப்பொறி பறந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசு மீது விழுந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில், செல்வராஜ் உடல் சிதறி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக் (11) , தமிழ்செல்வன் (12), லோகேஷ் (20) ஆகியோரும் உயிரிழந்தனர். இந்நிலையில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ளார். 

வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேர்

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பூசாரிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று இரவு சுமார் 8.50 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பிடித்து வெடித்ததில் கஞ்சநாயக்கன்பட்டி, கொட்டமேடுவைச் சேர்ந்த செல்வராஜ் (29), குருவாலியூரைச் சேர்ந்த சிறுவர்கள் செல்வன். தமிழ்செல்வன் (11) த/பெ.சேட்டு மற்றும் செல்வன், கார்த்தி (11) த/பெ.சுப்பிரமணி ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொட்டமேடுவைச் சேர்ந்த லோகேஷ் (20) த/பெ.தங்கராஜ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.