எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி - மத்திய அரசு அறிவிப்பு
திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனுக்கு 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் "ஒரு சிறு இசை' என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதிவரும் இவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம்
இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி.க.சிவசங்கரன்.. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர்.1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள வண்ணதாசனுக்கு கடந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதையும் பெற்றுள்ளார்.
கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், சமவெளி, பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளும், சின்னு முதல் சின்னு வரை என்ற நாவலும் இவர் எழுதிய முக்கிய புத்தகங்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சாகித்ய அகாடமி விருதுகளை பெற்று வருகின்றன்ர்.
2012 ம் ஆண்டு தோல் நாவலுக்காக டி.செல்வராஜ் , 2013ல் கொற்கை நாவலுக்காக ஜோ டீ குரூஸ் , 2014ல் அஞ்ஞாடி நாவலுக்காக பூமணி , 2015ல் இலக்கிய சுவடிகள் புத்தகத்திற்காக மாதவன் ஆகியோரை தொடர்ந்து இந்த ஆண்டு வண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.