யுபிஎஸ்சி-யில் அதிகளவில் சாதிப்பவர்கள் கிராமப்புற மாணவர்கள்தான் - மாவட்ட வருவாய் அலுவலர் பெருமிதம்…
கரூர்
யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் அதிகளவில் சாதிப்பவர்கள் கிராமப்புற மாணவர்கள்தான் என்று கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், ஆசான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புத் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். மூன்றாமாண்டு மாணவி கார்த்திகா வரவேற்றார். கல்லூரியின் தலைவரும், கல்லூரியின் செயலர் ஆர்.ஜெகநாதன் வாழ்த்திப் பேசினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் பங்கேற்றார். அப்போது, அவர் பேசியது:
“இன்றைக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களில் அதிகளவில் சாதிப்பவர்கள் கிராமப்புற மாணவர்கள்தான்.
போட்டித்தேர்வு எழுதப் பட்டப்படிப்பு எனும் கல்வித் தகுதி அவசியம். அதை ஐ.ஐ.டி.யில் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கு படிக்கிறோம் என்பதை விட எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம்.
நல்ல நட்பு வட்டாரமே வாழ்க்கையின் அடித்தளம். நல்ல நண்பர்கள் நமக்கு நல்ல ஆலோசகராக இருப்பார்கள்” என்றுத் தெரிவித்தார்.
இதில், கல்லூரி முதல்வர் ராஜேஷ் உள்ளிட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.