சாராயக் கடை முதல் பெட்ரோ பங்க் வரை புழக்கத்தில் விடப்படும் ரூ.500 கள்ள நோட்டுகள்; ஏமாற்றத்தில் வணிகர்கள்...
வேலூர்
வேலூரில் கடந்த சில மாதங்களாக ரூஒ.500 கள்ள நோட்டுக்கள் சாராயக் கடை முதல் பெட்ரோல் பங்க் வரை புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் வணிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் உள்ள வணிக நிறுவனங்கள், நெசவு, உணவு விடுதிகள், அரசு சாராயக் கடைகள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அலைமோதும் இடங்களில் சமூக விரோதிகள் சிலர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர்.
இவர்கள், வணிகர்களிடம் பணத்தைக் கொடுத்து பொருள்களை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையாக நல்ல நோட்டுகளைப் பெற்றுச் செல்வதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர்.
இதேபோல, அரசு சாராயக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அமோகமாக நடைபெறுகின்றன. இவற்றை வணிகர்கள் வாங்கி வங்கியில் செலுத்தும்போது தான் அவை கள்ள நோட்டுகள் என்று தெரிந்து கொள்கின்றனர்.
வங்கி அதிகாரிகள் தெரிவிக்கும்வரை அவற்றை நல்ல நோட்டு என்று நினைத்தே பைக்குள் வைத்து இருக்கின்றனர். கள்ளநோட்டு என்று தெரிந்ததும் தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை நினைத்து மன உளைச்சலும் அடைகின்றனர்.
மேலும், கள்ள நோட்டுக்களை மீண்டும் கொண்டு வந்தால் காவல் நிலையத்தில் புகார் செய்வோம் என்று வங்கி அதிகாரிகள் எச்சரிப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கின்றனர்.
எனவே, நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விடும் கும்பலைப் பிடிக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்களும், மக்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.