காரில் 70 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, கடல் அட்டை கடத்தல்; கடத்தியவர்கள் தப்பியோட்டம்…
இராமநாதபுரம்
வேதாளை கடற்கரையில் காரில் 70 லட்சம் மதிப்புள்ள 70 கிலோ கஞ்சா, 10 கிலோ கடல் அட்டை கடத்திய இருவர் காவலாளர்களை கண்டதும் தப்பியோடினர்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து கஞ்சா கடத்தப்படுகிறது என்ற இரகசிய தகவல் காவலாளர்களுக்கு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் மண்டபம் காவல் நிலைய ஆய்வாளார் கஜேந்திரன், உதவி ஆய்வாளர் நவநீதன், தனிப்பரிவு காவலர் சுரேஷ்பாலாஜி உள்ளிட்ட காவலாளர்கள் மரைக்காயர்பட்டினம், வேதாளைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதாளை கடற்கரையில் வந்த காரை காவலாளர்கள் நிறுத்தி முயற்சித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வெகு தொலைவு சென்று நின்றது. பின்னர் அதில் இருந்து இரண்டு பேர் இறங்கி தப்பி ஓடினர்.
அதனைத் தொடர்ந்து காரை காவலாளர்கள் சோதனை செய்தபோது அந்த காரில் மூன்று பெரிய பேக்குகளில் 32 பார்சல்களில் 70 கிலோ கஞ்சாவும், ஒரு பெரிய பார்சலில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் 10 கிலோவும் இருப்பது தெரிந்தது.
அதன் பின்னர் அந்த காரையும், கஞ்சா, கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்த காவலாளர்கள் மண்டபம் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
மேலும் காரின் உள்ளே இருந்த ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்து விசாரித்தபோது காரில் வந்தது மதுரை கூடல்நகரைச் சேர்ந்த சுதாகர் (37) என்பதும் மற்றொருவர் வேத கிரிதர கணேசன் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் காவலாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடல் அடடைகளின் சர்வதேச மதிப்பு ரூ. 75 இலட்சம் இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது.