அமைச்சரிடம் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு – உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…!!!
பாலில் கலப்படம் செய்வதாக வதந்தி பரப்பி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மூன்று தனியார் பால் நிறுவனங்கள் தொடந்த வழக்கில் 4 வாரத்திற்குள் பதில் தருமாறு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில்ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், இதனால் குழந்தைகளுக்கு கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகும் எனவும் கூறி மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வந்தார்.
இதற்கு மக்கள் மத்தியில் வீண் பீதியை கிளப்புவதாக பால் முகவர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
பாலில் கலப்படம் இருப்பதை நிரூபிக்க முடியாமல் போனால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் இல்லையென்றால் தூக்கில் தொங்குவதாகவும் சரமாரியாக வார்த்தைகளை அள்ளி வீசினார்.
இதையடுத்து ரிலையன்ஸ் மற்றும் நெஸ்லே நிறுவன்ங்களில் கலப்படம் இருப்பதாக பரபரப்பு பேட்டி அளித்தார்.
ஆனால் அவர் கூறியதற்கு இரண்டு நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், ஹட்சன், டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
அதில், பாலில் கலப்படம் செய்வதாக வதந்தி பரப்பி வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தன.
இந்த வழக்கு இன்று நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பால் கலப்படம் குறித்து ஆதாரம் இன்றி பேசக் கூடாது எனவும், ஒரு கோடிரூபாய் கொடுப்பது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டனர்.