சாலைப் பணியாளர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முடிவு...தீர்மானமும் நிறைவேற்றம்...
பெரம்பலூர்
சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமை செயலகத்தை மே 8-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சாலைப் பணியாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் 6-வது மாவட்ட மாநாடு பெரம்பலூர் மதரசா சாலையில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடந்தது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முத்து தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜா வரவேற்றார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். பொருளாளர் சுப்ரமணியன் அறிக்கை வாசித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆளவந்தார், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட் துணைத் தலைவர் தயாளன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஆனந்தன் ஆகியோர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், "சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிகாலமாக அறிவித்து பணிப்பலன்கள் வழங்க வேண்டும்.
நிரந்தர ஊதிய தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும்.
பணிநீக்க காலத்தில் இறந்துபோன சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும்.
சாலை பராமரிப்பு பணியை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட்டு நெடுஞ்சாலைத்துறையே ஏற்று நடத்த வேண்டும்.
சாலை பணியாளர் காலியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே மாதம் 8-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.