ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி திடீர் மாற்றம் - பிரவீன் நாயர் நியமனம்
ஜெயலலிதா மறைவை அடுத்து சென்னை ஆர்,கே,நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் மருது கணேஷ் என்பவர் களமிரங்கியுள்ளார்.
ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் வட சென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்துள்ளார்,
இப்படி பலமுனைப் போட்டி நிகழும் ஆர்.கே.நகர் தொகுதி கடந்த சில நாட்களாக சுறுசுறுப்படைந்துள்ளது. தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே பத்மஜா தேவி என்ற அதிகாரி இத் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் திடீரென பத்மஜா தேவி இன்று மாற்றப்பட்டார். அவருக்கு பதில் பிரவீன் நாயர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்மஜா தேவி மீது திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அவர் ஒரு சார்பாக செயல்படுவதாக புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று அதிரடியாக பத்மஜா தேவி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. பிரவீன் நாயர் இனி ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.