Revenue Officers hunger strike in Tirupur Participation in four districts ...
திருப்பூர்
திருப்பூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் இந்தப் போராட்டத்தால் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டத்தை நேற்று காலை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மேற்கொண்டனர்.
இந்த உண்ணாவிரப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் தயானந்தன் (திருப்பூர்), சுந்தர்ராமன் (கோயம்புத்தூர்) ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் சண்முகவடிவேல் வரவேற்றார். முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சிவஜோதி போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர்கள் முருகதாஸ் (திருப்பூர்), அருள்முருகன் (கோயம்புத்தூர்), குருராகவேந்திரன் (ஈரோடு) ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
இதில், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ஞானதம்பி, வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுசீலா, அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் பாக்கியம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்தப் போராட்டத்தில் "வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும்.
வருவாய்த்துறையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஆண்டுதோறும் பதவி உயர்வு பட்டியலை உரிய தேதியில் வெளியிட வேண்டும்.
நேரடியாக துணை தாசில்தாரை நியமனம் செய்யக் கூடாது" உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் அந்தஸ்தில் உள்ளவர்கள் வரை பலரும் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.
இதனால் தாசில்தார் அலுவலகம், ஆட்சியர் அலுவலகத்தில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
