ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா... தூத்துக்குடியில் பரபரப்பு...
தூத்துக்குடி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டத்திற்கு கூட்டமைப்புத் தலைவர் கலையரசன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் சுடலை வரவேற்று பேசினார். இவர்களது கோரிக்கைகளை விளக்கி ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் தனியார் கல்லூரி அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தமிழரசன்,
தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, நில அளவை ஒன்றிப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவம் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "ஊழியர்களை பழிவாங்கும் நோக்கில் இடமாறுதல் செய்யப்பட்டதை கண்டித்தும்,
ஊரக வளர்ச்சித்துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டியலை வெளியிட வேண்டும்" என்று வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் இறுதியில் மாவட்ட துணைத்தலைவர் ஞானராஜ் நன்றித் தெரிவித்தார்.