ஆவணங்களை திரட்டும் கொடநாடு எஸ்டேட் உரிமையாளர்... களத்தில் குதித்த பீட்டர் எட்வர்டு!!!
கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர் பீட்டர் எட்வர்டுஇ தன்னிடம் இருந்து மிரட்டி வாங்கப்பட்ட அந்த எஸ்டேட்டை மீட்க சட்டப் பூர்வமான நடவடிக்கையில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ளது.
1985-ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய ஆட்சியின் போது பிலிப்ஸ் என்ற ஆங்கிலேயர் உள்ளூரை சேர்ந்த ஒருவரிடம் 900 ஏக்கர் வாங்கி உள்ளார். அந்த நிலத்தில் சோலைவனம், புல்வெளி, காடுகள் அதிக அளவில் இருந்தன.
அதை 40 ஆண்டுகள் போராடி உள்ளூர் தொழிலாளிகளை வைத்து எஸ்டேட்டாக உருவாக்கி உள்ளார்.1930-ம் ஆண்டு வேறு ஒருவர் எஸ்டேட்டை பராமரித்துள்ளார்.
1975-ம் ஆண்டு கிரேக் ஜோன்ஸ் என்பவர் கொடநாடு எஸ்டேட்டை விலைக்கு வாங்கினார். அதன் பின்னர் அவரது மகன் பீட்டர் எட்வர்டு கொடநாடு எஸ்டேட்டை நிர்வகித்து வந்தார்.
1994-95 -ம் ஆண்டு முதமைச்சராக இருந்த ஜெயலலிதா இந்த கொடநாடு எஸ்டேட்டை விலைக்கு வாங்கினார். அதை ஒட்டியுள்ள 700 ஏக்கர் கொண்ட ஹாரிசன் எஸ்டேட்டை சசிகலா விலைக்கு வாங்கினார். தற்போது ஜெயலலிதா- சசிகலா ஆகியோருக்கு சொந்தமாக 1600 ஏக்கர் நிலத்தில் இந்த கொடநாடு எஸ்டேட் உள்ளது.
கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளரான பீட்டர் எட்வர்டுவுக்கு தற்போது 60 வயதாகிறது. அவர் பெங்களூரில் ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில் கொடநாடு எஸ்டேட் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் கொடநாடு எஸ்டேட்டை மீட்க அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் எட்வர்டு அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சசிகலா என்னை மிரட்டி கொடநாடு எஸ்டேட்டை வாங்கி விட்டார் என்று பீட்டர் எட்வர்டு பரபரப்பு புகார் தெரிவித்தார்.
அவர் எஸ்டேட்டுக்கு ரூ.7 கோடி கேட்ட போது தராமல் மிரட்டியதாக தெரிவித்தார். அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அப்போது அமைதியாக இருந்து விட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் செய்திளாளர்களிடம் பேசிய பீட்டர் எட்வர்டு,
கொடநாடு எஸ்டேட்டை எங்களிடம் இருந்து அபகரித்து விட்டனர். கொடநாடு எஸ்டேட்டை கொடுத்த வகையில் எங்கள் குடும்பத்துக்கு சேரவேண்டிய தொகையை பெற கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதாவிடம் போராடினோம்.
அவரை சந்திக்க சென்னை மற்றும் கோத்தகிரிக்கு சென்றோம். அவரை பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்ததால் எங்களால் எளிதாக அணுக முடியவில்லை.
ஒவ்வொரு முறை சந்திக்க செல்லும் போதும் ஏமாற்றமே மிஞ்சியது.
சொத்து குவிப்பு வழக்கில் அரசால் பறிமுதல் செய்யப்படும் ஜெயலலிதா சொத்துக்கள் பட்டியலில் கொடநாடு எஸ்டேட் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள சொத்துக்களை அரசு பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அறிந்தேன்.
இதனால் கொடநாடு சொத்தை சட்ட ரீதியாக மீட்பதில் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதற்காக ஆவணங்களை தயார் செய்து வருகிறேன்.
மேலும் இந்த வழக்கு பற்றி பெங்களூர் மற்றும் சென்னையில் உள்ள சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். அவர்களின் ஆலோசனை படி எனது சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பேன் என்றார்.
கொடநாடு எஸ்டேட்டை விற்பனை செய்யும் போது கோத்தகிரி, பெங்களூரில் நடந்த பேச்சுக்களின் போது நானும் பங்கேற்று உள்ளேன். அதனால் அனைத்து விவரங்களும் எனக்கு தெரியும். பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அனைவரையும் எனக்கு நன்கு தெரியும். எனவே சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வழக்கு நடவடிக்கையை மேற்கொள்வேன்.
ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட நிலமோசடி சட்டத்தின்படி கொடநாடு எஸ்டேட்டை மீட்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
சொத்தை விற்கும் போது தான் எனக்கு அடிக்கடி மிரட்டல் வந்தது. தற்போது எந்த மிரட்டலும் வரவில்லை. அப்படியே வந்தாலும் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு பீட்டர் எட்வர்டு கூறினார்.