முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்துவரும் கோரிக்கை மனுக்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை - ஆட்சியர் உறுதி...
பெரம்பலூர்
முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து வரும் கோரிக்கை மனுக்களின் மீது காலதாமதமின்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் சாந்தா, "அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு விரைந்து சென்று சேரும் வகையிலும், முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து வரும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும், மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யும் அனைத்துத் துறைகளின் முதல் நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்.
இந்தக் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த கூட்டத்திற்கு வரும் முதல்நிலை அலுவலர்கள் தங்கள் துறைகள் சார்ந்த ஒரு பக்க அளவிலான குறிப்புகளுடனும், தேவையான தகவல்களுடனும், தங்கள் துறைசார்ந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முழுவிவரங்களுடனும் வரவேண்டும்.
வாரந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்படும். அதனடிப்படையில் நிலுவையில் உள்ள மனுக்களை விரைவில் தீர்க்க தேவையான நடவடிக்கையினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த கூட்டத்தின் வாயிலாக முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அமைச்சர் தங்களது துறைகளுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும், அந்த திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு மற்ற துறைகளிலிருந்து வழங்கவேண்டிய ஒத்துழைப்பு குறித்தும், விரிவாக விவாதிப்பதற்கு இந்தகூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும்.
மக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கை ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து வந்துள்ள கோரிக்கை மனுக்களின் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து அதற்கான பதிலை அளிக்க வேண்டும்" என்று ஆட்சியர் சாந்தா தெரிவித்தார்
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர்திட்ட அலுவலர் தேவநாதன் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதன்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.